விக்கிரவாண்டி : அரசு விரைவு பஸ்சை மெதுவாக இயக்கிய டிரைவர் மீது பயணிகள் போலீசில் புகார் அளித்ததால், மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப் பட்டனர்.
வேளாங்கண்ணியிலிருந்து, சென்னைக்கு அரசு விரைவு பஸ் (டி.என் 68, என் 0502) ஒன்று, நேற்று முன்தினம் காலை 7:00 மணியளவில் புறப்பட்டது. திருவாரூரைச் சேர்ந்த டிரைவர் செந்தில்குமார், 42, திருக்குவளை அடுத்த கீழையூரைச் சேர்ந்த கண்டக்டர் ராஜாராம், 31; ஆகியோர், பஸ்சில் 7 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர்.
வழியில் பஸ் பழுதானதால், மயிலாடுதுறை டிப்போவில் சரி செய்தனர். மீண்டும் மாலை 5:00 மணிக்கு, பண்ருட்டி டெப்போவில் சரி செய்தனர். அதன் பின், இரவு 8:00 மணியளவில், விக்கிரவாண்டி அருகே தனியார் ஓட்டலில் பஸ்சை நிறுத்தி, டிபன் சாப்பிட்டுள்ளனர். அங்கு மழை பெய்ததால், மீண்டும் பஸ்சை இயக்க முடியவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், டிரைவர் மது போதையில் இருப்பதாக, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன், பனையபுரம் அருகே பஸ்சை நிறுத்தி சோதனை செய்தார்.
இதில், பஸ் ‘பிரேக் டவுன்’ ஆனதால் மெதுவாக இயக்கியது தெரிய வந்தது.
தொடர்ந்து, விக்கிரவாண்டி டோல்கேட் அருகே பழுதான பஸ்சை நிறுத்திவிட்டு, பயணிகளை வேறு பஸ்சில் ஏற்றி, சென்னைக்கு அனுப்பி
வைத்தனர்.
Courtesy :Dinamalar 18 Oct. 2017 07:43
Discover more from My TNSTC Blog
Subscribe to get the latest posts sent to your email.